எ‌ன்னு‌ள் ஏ‌ற்ப‌ட்ட பா‌தி‌ப்பை ஓ‌வியமா‌க்‌கினே‌ன் - புகழே‌ந்‌தி  

நேர்காணல்:அய்யநாதன் 

தமிழ்.வெப்துனியா.காம்,9.9.2009,10.9.2009


இல‌ங்கை‌யி‌ல் த‌மி‌ழீழ‌ர்களு‌க்கு எ‌திரான தா‌க்குத‌லி‌ல் ஈழ ம‌க்க‌ளி‌ன்படுகொலைகளையு‌ம் த‌மி‌ழ் ம‌க்க‌ள் அனுப‌வி‌த்த இ‌ன்ன‌ல்களையு‌ம் ஓ‌வியமாக வரைந்த ஓ‌விய‌ர் புகழே‌ந்‌தியை அவரது இ‌ல்ல‌த்‌தி‌ல் செ‌ன்று ச‌ந்‌தி‌‌த்தோ‌‌ம்.இ‌னி அவருட‌ன்.

தமிழ்.வெப்துனியா.காம்
: ‘உயிர் உறைந்த நிறங்கள்’ என்ற உங்களுடைய ஓவியக் கண்காட்சி எல்லா இடத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஈழப் பிரச்சனை தொடர்பாக, அங்கு நடந்து முடிந்த படுகொலை, ஈழத் தமிழர்கள் அனுபவித்த இன்னல்கள் எல்லாம் சேர்த்து ஒரு மிகப்பெரிய ஓவியப் படைப்பை வெளியிட்டு அதன் மூலம் அந்த மக்களினுடைய உணர்வை, இன்னும் சொல்லப் போனால் அந்த மக்களினுடைய துயரத்தை மிகப்பெரிய அளவிற்கு நீங்கள் வெளிக் கொண்டு வந்தீர்கள். இப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தூண்டுதலாக அமைந்தது அவர்களின் துயரமா? இல்லை அதையும் தாண்டி வேறு எதுவுமா? 

ஓவியர் புகழேந்தி: உண்மையிலேயே இந்த ஓவியங்கள், உயிர் உறைந்த நிறங்கள் என்ற தொகுப்பில் இருக்கக் கூடிய 50 ஓவியங்களில் 25 ஓவியங்கள் கடந்த 1983ஆம் ஆண்டிலிருந்து 2008 வரையில் வரையப்பட்ட 25 ஓவியங்கள். 25 ஆண்டுகளுக்கு மேலாக 25 ஓவியங்களும், பிறகு கடந்த 2 மூன்று மாதங்களாக 25 ஓவியங்களுமாக சேர்த்து மொத்தம் 50 ஓவியங்களுமாக காட்சிப்படுத்தி இருக்கிறேன். 

அந்த பழைய 25 ஓவியங்களை எப்படி நான் செய்தேன் என்று சொல்வதுதான் உங்கள் கேள்விக்கு நான் கொடுக்கும் முக்கியமான பதிலாக இருக்கும் என்று கருதுகிறேன். 

1983ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து ஓவியக் கல்லூரியில் மாணவனாக என்னை இணைத்துக் கொள்கிறேன். அப்படி இணைத்துக் கொள்ளும் தருணத்தில் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாணவர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த மாணவர் போராட்டத்தில் நானும் இணைத்துக் கொள்கிறேன். உண்மையைச் சொல்லப் போனால், அந்தக் காலக்கட்டத்தில் கல்லூரியில் என்னை இணைத்துக் கொண்டேனே தவிர, கல்லூரிக்குள் செல்ல முடியாத அளவிற்கு மாணவர் போராட்டம் நடைபெற்றது. உடனடியாக கல்லூரி காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. 

ஆனால், எங்கள் போராட்டம் விளையாட்டு அரங்குகள், பூங்காக்கள், பெரிய திடல்கள் என எங்கெங்கெல்லாம் இடங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் மாணவர்கள் கூடி திட்டமிட்டு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பேருந்துமறியல்கள்போன்ற

பல்வேறு வடிவங்களில் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தோம். 

அப்படி நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் நான் தொடர்ந்து பங்கெடுத்தேன். ஏற்கனவே எனக்கு இருந்த தமிழ் உணர்வும், திராவிட இயக்க உணர்வும் எ‌ன்னை எளிதாக அந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வைக்கிறது. 

1983 ஜூலையில் ஈழ்த்தில் நடந்த கலவரத்திற்குப் பிறகு ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான தமிழர்கள் தமிழகம் நோக்கி அகதிகளாக வந்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த மாணவர் போராட்டம் நடைபெற்றது. 

என்னை இணைத்துக் கொண்டு போராடுகின்ற சூழலில் பல்வேறு போராளி இயக்கங்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அப்படி தொடர்பு ஏற்பட்ட அந்த காலகட்டத்தில் அவர்கள் காண்பித்த வீடியோ படங்கள், புகைப்படங்கள், படித்த செய்திகள் இவைகளெல்லாம் என்னை பெரும் தாக்கத்திற்கு உள்ளாக்கின. 

ஒரு ஓவியனாக என்ன செய்ய முடியும் என்று நான் சிந்தித்ததனுடைய விளைவுதான் இந்த ஓவியங்கள். அந்த பிறகு அப்பொழுது நடைபெற்ற படுகொலைகளை வைத்துப் பல்வேறு விதமான ஓவியங்களை வரைந்தேன். அதனைப் பார்த்த போராளிகளும், அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும் உண்மையிலேயே ஒரு புகைப்படம் சொல்ல முடியாத பல்வேறு செய்திகளை இந்த ஓவியம் வெளிப்படுத்துகிறது என்று சொன்ன பொழுதுதான் மிகவும் ஊக்கம் ஏற்பட்டு, அதுபோன்ற படைப்புகளை நான் செய்யத் துவங்கி அதனை பல்வேறு இடங்களில் காட்சிக்கு வைத்த பொழுது மிக எளிதாக பார்வையாளர்களை மிகவும் தாக்கத்திற்கு உள்ளாக்கியது. 

தமிழ்.வெப்துனியா: முதல் முதலில் எங்கு காட்சிக்கு வைத்தீர்கள்? 

புகழேந்தி: முதலில் 1985, 1986 காலகட்டங்களில் தஞ்சாவூரில் வைத்தோம். பிறகு ஈரோடு போன்ற பல்வேறு இடங்களிலும், தென் மாவட்டங்களிலும் வைத்தோம். ஈழம் தொடர்பான கூட்டங்கள் நடந்தபோது அங்கு காட்சியாக வைப்பது, தனி நபர் காட்சியாக வைப்பது, கலை நிகழ்ச்சி, மாநாடுகள் நடக்கும் பொழுது அதை வைப்பது என்று தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகள் நடைபெறுகின்ற பொழுது காட்சிப்படுத்தினோம். அப்படி காட்சிப்படுத்திய பொழுது மக்களிடையே அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 

என்னுடைய உணர்வு என்னவென்றால், என்னைப் பொறுத்தவரை நான் ஒரு ஓவியத்தை கையில் எடுத்திருக்கின்ற ஒரு படைப்பாளன். என்னுடைய வடிவமாக இருக்கின்ற ஓவியத்தில் ஈழ விடுதலைப் போராட்டத்தை, அங்கு துன்பப்படுகின்ற மக்களுடைய வாழ்க்கையை இந்த ஓவியங்களிலே பிரதிபலித்து, அப்படி பிரதிபலிக்கின்ற ஓவியங்களை மக்களிடையே காட்சிப்படுத்துவதன் மூலம் மக்களை சிந்திக்க வைக்க வேண்டும், செயல்பட வைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. 

தமிழ்.வெப்துனியா: 1983ல் இருந்து 2009ஆம் ஆண்டுவரை ஒரு நீண்டநெடிய காலகட்டம். அந்தப் பிரச்சனைகளைப் பொறுத்து, அவர்களுடைய துயரங்களைப் பொறுத்து நீங்கள் உணர்ந்தது, அது உங்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் அதனுடைய விளைவு இந்த 50 படங்கள். இதைத் தவிர இடையில் நீங்கள் ஈழத்திற்கு சென்று வந்தீர்கள். அது எப்பொழுது? 

புகழேந்தி: 2005ஆம் ஆண்டு முதன் முதலாக நான் ஈழத்திற்கு சென்று வந்தேன். ஈழ விடுதலை குறித்த ஓவியங்களை தமிழகம் மட்டுமல்லாமல், இந்திய அளவில் பல்வேறு இடங்களிலும் காட்சிப் படுத்தினோம். அதேபோல் உலகம் முழுவதும் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ்,

இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில் அது காட்சிப் படுத்தப்பட்டது. அப்படி காட்சிப்படுத்துகின்ற நிலையில், தமிழகத்திலும் சரி, புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி, என்னைச் சந்திக்கின்ற மக்கள், நீங்கள் ஈழத்திற்கு சென்றிருக்கின்றீர்களா? ஈழத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றீர்களா என்று என்னிடம் கேட்பது உண்டு. அப்படி கேட்கின்ற நிலையில், ஒவ்வொரு நாளும் இல்லை, இல்லை என்றுதான் நான் சொல்லி வந்தேன். அதற்கான காலச் சூழலும் அமையவில்லை. ஆனால் 2005ஆம் ஆண்டு நான் தமிழீழம் சென்றபோது என்னுடைய ஓவியங்களுடன்தான் சென்றேன். 27 ஓவியங்கள் அப்பொழுது. இந்த 27 ஓவியங்களையும் ஈழத்தில் பல்வேறு இடங்களில், 15க்கும் மேற்பட்ட இடங்களில், அதாவது கிளிநொச்சி தொடங்கி மல்லாவி, பூநகரி, புதுக்குடியிருப்பு, முள்ளியவலை, பலை, யாழ்ப்பாணத்தில் வடமராட்சி, தென்மராட்சி, யாழ் பல்கலைக்கழகம் மன்னார்… 

தமிழ்.வெப்துனியா: அப்பொழுது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ராணுவம் கட்டுப்பாட்டில் இருந்ததல்லவா? 

புகழேந்தி: கண்காட்சியை ராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் வைத்தோம். இன்னும் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்று திரிகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளில் எல்லாம் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளெல்லாம் அந்த மக்களிடம் இருந்து எழுந்தது. ஆனால், எனக்கு நேரம் போதாத காரணத்தால் ஓவியங்களை அங்கேயே விட்டுவிட்டு முடிந்தால் நீங்கள் தொடர்ந்து செய்யும் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். தொடர்ந்து பல இடங்களில் வைத்ததாகவும் சொன்னார்கள். 

தமிழ்.வெப்துனியா: கிளிநொ‌ச்சி, மல்லாவி, பூநகரி பிறகு முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்றுள்ளீர்கள். அந்த இடங்களில்தான் தற்பொழுது மிகப்பெரிய படுகொலை நிகழ்ந்துள்ளது. நீங்கள் போனபோது இதே பகுதிகளில் எப்படி இருந்தது அவர்களுடைய வாழ்க்கை?

புகழேந்தி: நினைத்துப் பார்த்தால் உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. நான் சென்ற காலகட்டம் ஒரு சமாதான காலகட்டம் என்று சொன்னாலும் கூட, அது சமாதானம் இல்லாத ஒரு சூழல் என்றுதான் மக்கள் சொன்னார்கள். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அது மக்களுடைய வார்த்தையில் சொல்லப் போனால், ஒரு சமாதானமும் அற்ற, போரும் அற்ற ஒரு சூனியமான காலம் என்று அதை மக்கள் சொன்னார்கள். 

ஆனால், தொடர்ந்து குண்டுச் சத்தங்களோடு வாழ்ந்து வந்த மக்களுக்கு அந்த இடைப்பட்ட மூன்று, நான்கு ஆண்டு காலகட்டம் அந்தச் சத்தம் இல்லை என்கின்ற ஒன்றைத் தவிர, வேறு ஒரு வசதியும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. அந்த காலகட்டத்தில் உண்மையிலேயே கிளிநொச்சி நகரை மிகப்பெரிய அளவில் கட்டமைத்துக் கொண்டிருந்தார்கள் புலிகள். ஒரு பெரிய எதிர்பார்ப்போடு அந்த மக்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு மாதிரி நாடு அங்கு உருவாக்கப்பட்டது. வெறும் மாதிரி நாடு என்று வார்த்தையில் சொல்லாமல், எப்படி ஒரு நாடு இருக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு அனைத்து துறைகளிலும் ஒரு முன்மாதிரியாக இந்த நாடு விளங்க வேண்டும் என்பதற்கான வேலைகளையெல்லாம் அந்தப் போராளிகளுக்கு பிரித்துக் கொடுத்து, அவர்களுக்குத் தேவையான நிபுணர்களையெல்லாம் வெவ்வேறு நாடுகளில் இருந்து அழைத்து, அந்த திட்டமிடல்களையெல்லாம் செயல்படுத்துகின்ற நிலையில் புலிகள் இருந்தார்கள். அது ஒரு மிக முக்கியமான காலகட்டம் என்றே நான் கருதுகிறேன். 

கட்டடங்கள் எல்லாம் இடிந்து, நொறுங்கி பல்வேறு இடங்களில் அந்தப் போரின் வடுக்கள் மறையாக ஒரு சூழல்தான். நான் சென்றபோது சமாதான காலம் என்றாலும் கூட, அந்தப் போரினுடைய வடுக்களை நான் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆனால், அங்கிருந்த போராளிகளும் சரி, மக்களும் சரி, சொன்னதைக் கேட்டபொழுது இரண்டு, மூன்று ஆண்டுகளில் பல்வேறு வடுக்கள் மறைந்து விட்டது என்று சொன்னார்கள். ஆனாலும், சில வடுக்களை காணக்கூடியதாக இருந்தது. முதன்மைச் சாலையிலேயே இருக்கக்கூடிய கிளிநொச்சி மகா வித்யாலயா பள்ளியைப் பார்த்தால் அந்த வடுக்கள் தெரியும். அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் கிளிநொச்சி இருந்தது. 

இருந்தபோதிலும், புதிய புதிய கட்டடங்களை அவர்கள் கட்டி எழுப்பியிருந்தார்கள். அழகான தார்ச் சாலையைப் போட்டிருந்தார்கள். ஒரு தலைநகருக்குச் செல்லும் பொழுது, டில்லியிலேயே செளத் பிளாக், நார்த் பிளாக் என்று சொல்லக் கூடிய அளவிற்கு அந்த நிர்வாக கட்டமைப்புகளை நிர்வகிக்கின்ற அமைப்புகள் இருக்கின்ற அந்த இடங்களையெல்லாம் சொல்வார்கள். அதுபோல அந்த கிளிநொச்சி நகரினுடைய ஏ-9 நெடுஞ்சாலையில் இருபுறமும் பார்த்தால் தமிழீழ காவல்துறை, தமிழீழ அரசியல்துறை, தமிழீழ நிர்வாகத்துறை, தமிழீழ நீதித்துறை, தமிழீழ நடுவப் பணியகம், தமிழீழ நடுவண் நீதிமன்றம் என்றேல்லாம் இருந்தது. 

தமிழ்.வெப்துனியா: அப்பொழுது இந்த உணவுப் பொருள் விநியோகமெல்லாம் எப்படி நடந்து கொண்டிருந்தது. உணவுப் பொருட்களை அவர்கள் விநியோகித்தார்களா? அல்லது மற்ற ஏதேனும் சந்தையில் சென்று வாங்கிக் கொண்டு பொதுவாக நடந்துக் கொண்டிருந்ததா? 

புகழேந்தி: நல்ல, அற்புதமாக விவசாயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்குரிய காய், கனிகளையெல்லாம் இயற்கை வழிகளிலேயே உற்பத்தி செய்து அவர்களே விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு மக்களுடைய பங்களிப்பும் இருந்தது. போராளிகள் அதை நிர்வகித்தாலும், மக்களுடைய பங்களிப்பும் அதிகமாக இருந்தது. அதேபோல, உணவுப் பொருட்களுக்கெல்லாம் சந்தையும் இருந்தது. புலிகளும் அதற்கான நிர்வாகங்களையெல்லாம் நிர்வகித்து அதன் ஊடாகவும் அவர்கள் விற்பனை செய்தார்கள். 

பாண்டியன் வாணிபம், சேரன் வாணிபம், நாம் இங்கே ஹோட்டல்கள் என்று பார்க்கிறோம். தமிழில் விடுதி என்று சொல்கிறோம். அதுவும் சரியான சொல் அல்ல. ஆனால், சேரன் வாணிபம் என்று சொன்னார்கள், நீரூற்று என்று சொன்னார்கள். இப்படி பல்வேறு வகையான தமிழ்ச் சொற்களையெல்லாம் அவர்கள் பயன்படுத்தினார்கள், முதன்மைச் சாலையிலேயே அது இருந்தது. 

தமிழ்.வெப்துனியா;அப்பொழுது நீங்கள் போயிருந்த அந்த காலகட்டத்தில், மக்களுக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய போர் ஏற்படும், அதற்கான சாத்தியம் உள்ளது என்பதையெல்லாம் அவர்கள் உணர்ந்திருந்தார்களா? 

புகழேந்தி: உண்மையைச் சொல்லப் போனால், என் அளவிற்கு மக்களைச் சந்தித்தவர்களாக யாரும் இருக்க முடியாது. எல்லா இடங்களிலும் மக்களை ஆயிரக்கணக்கில் சந்தித்தவன். ஒவ்வொரு இடத்திலும் ஓவியக் கண்காட்சி நடத்தும் பொழுது ஒரு நாள் முழுவதும் அந்த இடத்தில் நான் இருப்பேன். ஒரு நாள் நடந்தாலும் ஒரு நாள் முழுவதும், இரண்டு நாள் நடந்தால் இரண்டு நாள் முழுவதும் மக்களுடனேயே இருந்தேன். கொஞ்சம் கூட நேரத்தை வேறு எதற்கும் பயன்படுத்தாமல், மக்கள் அந்த ஓவியங்களை பார்த்து உள்வாங்குவதையும், ஓவியங்களைப் பார்த்து கதறுவதையும், அழுவதையும், அதைப் பார்த்து உணர்வு பெறுவதையும் நான் கூடவே இருந்து பார்த்தவன்.

அதேபோல, அங்கு வருகின்றபொழுது தற்போதைய நிலை குறித்தும், கடந்த கால நிகழ்வுகள் குறித்தும், எதிர்காலத்திற்கான சிந்தனை குறித்தும் அந்த மக்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் நம்ப முடியாது, சாதாரணவர்கள், பாமரர்கள் என்று சொல்லக் கூடியவர்களெல்லாம் மிக உன்னதமாக கருத்துக்களை கொண்டவர்களாக இருந்தார்கள். அந்தப் போர் அவர்களை அந்த அளவிற்கு பயிற்றுவித்து இருக்கிறது. இயக்கம் அந்த அளவிற்கான ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. அதெல்லாம் மிக முக்கியமான ஒன்று.

அவர்கள் சொன்னார்கள், இந்தக் காலகட்டம் மிகவும் மோசமான ஒரு காலகட்டம். எங்களுடைய வாழ்க்கையை எல்லாம் சிங்களவர்கள் அழித்துவிட்டார்கள். எங்களுடைய குழந்தைகளுடைய படிப்புகளையெல்லாம் சிங்களவர்கள் சீரழித்துவிட்டார்கள். இன்றைக்கு நாங்கள் மிகப்பெரிய அளவிற்கு எழுந்து நிற்கின்றோம். என்றைக்கும் எழுந்து நிற்போம். ஆனால், இந்த போரும் அற்ற, சமாதானமும் அற்ற சூழல் எங்களுடைய வாழ்க்கையை சூனியமாக்கிவிடுமா என்று கருதுகின்றோம். நாங்கள் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை இழந்திருக்கிறோம். லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை இழந்திருக்கிறோம். சொத்து சுகங்களை இழந்திருக்கிறோம். எங்களுடைய மக்கள் ஏதிலிகளாக புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு இழப்புகளுக்கும் பிறகு இதுபோன்ற சூழலை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு விடுதலை ஒன்றுதான் தேவை. அந்த விடுதலை ஒன்றுதான் இவ்வளவு இழப்புகளையும் சரிசெய்ய முடியும். ஆகையினால் எங்கள் விடுதலைப் போரை தொடர்ந்து நடத்தச் சொல்லுங்கள் எங்கள் தலைவரை. அவ்வளவு இழப்புகளையும் ஈடு செய்கின்ற ஒரு தீர்வாக இந்தத் தீர்வு இருக்காது. ஆகவே சண்டைப் போடச் சொல்லுங்கள் எங்கள் தலைவரை. எங்கள் தலைவரிடம் சொல்லுங்கள் என்றே மக்கள் சொன்னார்கள்.

தமிழ்.வெப்துனியா:அதற்குப் பிறகு நீங்கள் புலிகளுடைய தலைமையையும் சந்தித்தீர்களா?. 

புகழேந்தி: சந்தித்து, இதையும் சொன்னேன். அனைத்து இடங்களுக்கும் சென்றுவந்த பிறகு அண்ணன் என்னிடம் கேட்டார், நீங்கள் இவ்வளவு இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறீர்கள். என்ன மாதிரியான நிலையை நீங்கள் பார்க்கிறீர்கள்? இந்த நாட்டினுடைய எல்லா வகையான கட்டமைப்புகளையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், உணர்ந்திருக்கிறீர்கள். மக்களுடைய உணர்வுகளை நீங்கள் புரிந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் என்ன உணர்கிறீர்கள். என்ன செய்ய வேண்டியிருக்கிறது இன்னும். எப்படிப்பட்ட மாற்றங்கள் வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள் என்று பல்வேறு விஷயங்களைப் பற்றிக் கேட்டார். 

நான் முதலில் சொன்னது, தலைவரிடம் சொல்லி சண்டை போடச் சொல்லுங்கள் என்றுதான் மக்கள் சொன்னார்கள். ஒரு போருமற்ற, சமாதானமுமற்ற சூனியமான காலத்தில் வாழ்கிறோம். இந்த ஒரு வாழ்க்கைக்காக நாங்கள் இவ்வளவு போராளிகளை இழக்கவில்லை. இவ்வளவு ஆயிரம் மக்களை நாங்கள் இழக்கவில்லை. இவ்வளவு சொத்து சுகங்களை நாங்கள் இழக்கவில்லை. உறவுகளை இழந்து பல்வேறு மக்கள் ஏதிலிகளாக புலம்பெயர்ந்து வாழக்கூடிய இப்படிப்பட்ட நிலையில், இழந்ததெல்லாம் இதற்காக இல்லை. ஆகவே தலைவரிடம் சொல்லி சண்டை போடச் சொல்லுங்கள். நாங்கள் அவருடன் இருக்கிறோம் என்று அவர்கள் சொன்னார்கள் என்று நான் சொன்னேன். 

நாங்கள் சண்டை போடும்போது ஏன் சண்டை போடுகிறார்கள் என்று சொன்னார்கள். இப்போது எம்மக்கள் சண்டை போடச் சொல்கிறார்கள். எப்பொழுதும் தம்மக்கள் விடுதலையை மட்டுமே விரும்புவதாகச் சொன்னார். உண்மையிலேயே மக்களைப் புரிந்த தலைவர், தலைவரைப் புரிந்த மக்கள். 

தமிழ்.வெப்துனியா:ஒரு காலகட்டத்தில் எல்லாவற்றையும் இழந்து, விடுதலைதான் என்கின்ற ஒரு உணர்வு இருந்தபொழுது அந்தப் பேச்சுவார்த்தையில் தாங்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறோம் என்பதை புலிகள் உங்களுடன் பகிர்ந்து கொண்டார்களா? 

புகழேந்தி: அவர்களுக்கு ஒரே ஒரு தீர்வு தமிழீழம்தான். தமிழீழத்தை தவிர வேறு எதுவும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக முடியாது என்று அவர்கள் கருதினார்கள். அதில் அவர்கள் சமரசம் செய்து கொள்ளவும் தயாராக இல்லை. அதே நேரத்தில் இடைப்பட்ட தீர்வாக ஒரு தீர்வை சிங்களம் வழங்குமானால், நிச்சயமாக அதை பரிசீலிப்பதற்குத் தயாராக இருந்தார்கள். 

தமிழ்.வெப்துனியா: அதை யார் உங்களிடம் சொன்னது? 
புகழேந்தி: தமிழ்ச்செல்வனே சொன்னார். நடைமுறையிலும் நாம் பார்க்கிறோம். அவர்களுடைய பேச்சுவார்த்தையிலும் நாம் கவனித்துக் கொண்டிருந்தோம். தலைவருடன் பேசும் பொழுதும் இது குறித்து நான் பேசினேன். தமிழ்ச்செல்வனுடனும் நீண்ட நேரம் பேசினேன். பல்வேறு, நிறைய இன்னும் வெளியே தெரியாத பாலகுமாரன் போன்ற அறிவுக் களஞ்சியங்கள் இருக்கிறபோது, நிறைய பேர்களிடம் பேசினோம். பேச்சுவார்த்தையில் வெளியில் தெரிகிறவர் ஒருவரென்றால், பல்வேறு பேர் பின்புலத்தில் நின்கின்றவர்கள் இருக்கிறார்கள். இயக்கம் எல்லோரையும் முன்நிறுத்தாது. 

தமிழ்.வெப்துனியா: உங்களுடைய படங்களையெல்லாம், ஓவியங்களையெல்லாம் பார்த்தாரா? 

புகழேந்தி: எல்லா ஓவியங்களையும் பார்த்தார். ஒவ்வொரு ஓவியம் குறித்தும் அவர் கருத்துச் சொன்னார். உண்மையிலேயே நீண்ட நேரம் இருந்து அந்த ஓவியங்களைப் பார்த்து, அந்த வரிகளையும் பார்த்து... 

தமிழ்.வெப்துனியா: ஓவியக் கண்காட்சிக்கு வந்திருந்தாரா? இல்லை அந்தப் படங்களை கொண்டு சென்றிருந்தீர்களா? 

புகழேந்தி: ஓவியங்களைப் பார்த்தார்... ஓவியங்களைப் பார்த்தார். நிறைய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம். ஈழ விடுதலைப் போராட்ட ஓவியங்கள் மட்டுமல்லாமல், இன்னும் சில ஓவியங்களைப் பார்த்து உலக அளவில் நடந்த பல்வேறு செய்திகளையும் பகிர்ந்து ஒரு உலக வரலாற்றையே பேசுகின்ற ஒரு தருணம் ஏற்பட்டது. நல்ல ரசிகர், நல்ல உள்வாங்குதல் அவரிடம் இருந்தது. பன்முக ஆற்றல் உள்ளவர், பன்முக சிந்தனை உள்ளவர். பல்வேறு துறை அறிவு சார்ந்தவர் என்ற பல்வேறு தகவல்கள் யாருக்கும் தெரியாதது. 

உண்மையிலேயே அவர் நமக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய சொத்து. தமிழனத்திற்கு பல ஆயிரமாண்டு வரலாற்றில் இவரைப் போன்ற ஒரு தலைவரை நாம் பார்த்ததில்லை. வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்துவிட்டது என்பதுதான் பெரிய சோகம். நான் எழுத இருக்கிறேன். இதுபோன்ற செய்திகளையெல்லாம் முழுமையாக எழுத வேண்டும், அவருடன் நான் பேசியது, அவருடன் நான் கலந்துரையாடியது, எப்படிப்பட்ட சிந்தனைவாதி, எவ்வளவு பெரிய பல்துறை சார்ந்த அறிவுகளை அவர் பெற்றிருக்கிறார். ஆற்றல்களை அவர் பெற்றிருக்கிறார். ஒரு தொலைநோக்கு சிந்தனை உள்ள தலைவராக இருக்கிறார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. 

நான் வியந்து பார்த்த பல்வேறு செய்திகளைத் தந்திருக்கிறது. உண்மையிலேயே நம்முடைய இனத்தில் பிறந்த ஒருவர் என்பதற்காக இதையெல்லாம் நான் சொல்லவில்லை. யார் அவரிடம் பேசினாலும் இதைத்தான் அவர்கள் சொல்வார்கள். எந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் அவரிடம் போய் பேசிவிட்டு வந்தாலும், இவ்வளவு செய்திகளை எப்படி அவரால் தெரிந்து வைத்திருக்க முடிகிறது. எப்படி படிக்கிறார், எப்படி தெரிந்து வைத்திருக்கிறார். அது மருத்துவத் துறையாக இருந்தாலும் சரி, பொருளாதாரத் துறையாக இருந்தாலும் சரி, வேறு எந்தத் துறையாக இருந்தாலும் சரி எல்லோருமே வியந்து போற்றி வருகிறார்கள். இதையெல்லாம் பார்க்கின்ற பொழுது எனக்கு மிகவும் வியப்பாகவே இருக்கிறது. எனக்கே அந்த அனுபவம் இருக்கிறது.

தமிழ்.வெப்துனியா.காம்: அவரைக் கூட நீங்கள் ஓவியமாகப் படைத்தீர்கள். அவர் அதைப் பார்த்தாரா? 
ஓவியர் புகழேந்தி: பார்த்தார். எல்லா ஓவியங்களையும் பார்த்து கருத்து சொன்னவர், அந்த ஓவியத்தைப் பார்த்து மட்டும் கருத்து சொல்லவில்லை. அவர் கருத்து சொல்லும் வரை நானும் விடவில்லை. இதுதான் நடந்தது. எல்லா ஓவியத்தையும் பார்த்து, திலீபன் ஓவியத்தைப் பார்த்தார். கடைசி நேர திலீபனுடைய நிலையை வரைந்திருக்கிறீர்கள். எப்படி உங்களால் அதைப் பார்க்க முடிந்தது. உண்மையிலேயே மக்களே கேட்டார்கள். எங்கள் திலீபன் அண்ணாவை எப்படி இவ்வளவு நுட்பமாக, அந்த கடைசி நேரத்தினுடைய உணர்வுகளை‌க் கொண்டு வந்திருக்கிறீர்களே என்று கேட்டார்கள். அதே வெளிப்பாட்டை அண்ணனும் கேட்டார்கள். நான் சொன்னேன் அப்பொழுது, ஈழத்திலே திலீபன் உண்ணாவிரதம் இருந்தால், நாங்கள் தமிழ்நாட்டிலே இருந்தோம். எங்கள் உடல்கள் வெவ்வேறாக இருந்தாலும், உணர்வுகள் ஓரிடத்தில்தான் இருந்தது. என்னுடைய உணர்வுகள் எல்லாம் ஈழத்தில்தான் இருந்தது. அதனால் என்னால் உணரக்கூடியதாக இருந்தது. அதனால்தான் செய்ய முடிந்தது. 

இதுமட்டுமல்ல, பல்வேறு வகையான ஈழம் குறித்த ஓவியங்களைப் பார்த்துவிட்டு மக்களும் கேட்டார்கள், போராளிகளும் கேட்டார்கள், அண்ணனும் கேட்டார், எப்படி இவ்வளவு நுட்பமாக எங்கள் வாழ்க்கையை வாழாத நீங்களும் பதிவு செய்திருக்கிறீர்களே எப்படி என்று கேட்டார்கள். உண்மையிலேயே நான் வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். உங்கள் வீடுகள் அங்கு வீழுகின்ற போது அங்கே கேட்கின்ற கதறல்கள் எங்கள் காதுகளில் கேட்கின்றபோது அதை நான் உணர்ந்தேன். அதனால் நான் அனைத்து வகையான உணர்வுகளையும் பெற்றேன். அதனால்தான் என்னால் இப்படி செய்ய முடிந்தது. அதனால்தான் நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள் என்று நான் சொன்னேன். அதுதான் உண்மை. அந்த வலியை நாம் பெற்றிருக்கிறோம். 

25 ஆண்டுகளாக அந்த மக்கள் எவ்வளவு துன்பங்களையும், துயரங்களையும் அடைந்தார்கள் என்பதெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். அதனால்தான் அந்த ஓவியங்களை பார்த்து மக்கள் உணர்கிறார்கள் என்றால், அந்த வலியை நாம் உணர்ந்திருக்கிறோம். அதன் வெளிப்படாகத்தான் அந்த ஓவியத்தில் இருக்கிறது. 

தமிழ்.வெப்துனியா.காம்: 
உங்களுக்கு ஈழப் பிரச்சனையில் ஈழ மக்கள் பட்ட துயரம், துன்பம் எல்லாம் உங்களுக்கு ஒரு பெரிய தாக்கத்தை, வலியை ஏற்படுத்தியது. இதுபோன்று, இதற்கு ஈடாகவோ அல்லது சற்று குறைவாகவோ, கூடுதலாகவோ வேறு எந்த சம்பவமாவது உலக ரீதியில் உங்களை பாதித்து இவ்வாறு ஓவியம் தீட்டுவதற்கு தூண்டுதலாக அமைந்துள்ளதா? 

ஓவியர் புகழேந்தி: ஒரு உண்மையை நான் இங்கு பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து நான் இதை சொல்லி வருகிறேன். நம்முடைய பாரம்பரியத்தில் நமக்கென்று ஏற்கனவே இருந்த பல்வேறு உணர்வுகள், நாம் தமிழர், நம் மொழி தமிழ் மொழி என்ற உணர்வு நமக்கு இருந்தது. ஆனால், ஈழ விடுதலைப் போராட்டத்தை நான் ஓவியங்களில் பதிவு செய்த பிறகுதான், அது நமக்கு ஒரு உலகப் பார்வையைத் தந்தது. அந்த ஈழப் போராட்டம்தான் உலகத்தில் எந்த இனம் ஒடுக்கப்பட்டாலும், எந்த மக்கள் பாதிக்கப்பட்டாலும் அந்த மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்கின்ற உலகப் பார்வையை, சர்வதேசப் பார்வையை நமக்கு கொடுத்தது. 

ஆக, ஈழப் போராட்டம் என்ற ஒன்று இல்லாவிட்டால் உலகப் பார்வையே நமக்கு இருந்திருக்காது என்றுதான் நான் கருதுகிறேன். அந்த ஈழப் போராட்டம், உலகத்தில் எந்த மூலையில் மக்கள் ஒடுக்கப்பட்டாலும் அதற்காக குரல் கொடுக்க வேண்டும், அந்த மக்கள் படுகின்ற துன்பங்களை, துயரங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்கின்ற உந்துதலை எனக்கு கொடுத்தது. 

அப்படி நான் தென் ஆப்ரிக்க விடுதலைப் போராட்டத்தை பதிவு செய்திருக்கிறேன். தென் ஆப்ரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் நெல்சன் மண்டேலாவினுடைய வாழ்க்கையையும் நான் அதில் பதிவு செய்திருக்கிறேன். யாசர் அராஃபத்தினுடைய பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை பதிவு செய்திருக்கிறேன். அதேபோல்...

தமிழ்.வெப்துனியா: ஆனால், எல்லாவற்றிற்கும் தூண்டுதலாக அமைந்தது ஈழப் போராட்டமா? 

புகழேந்தி: ஆமாம், என்னைப் பொறுத்தவரை அதன்பிறகுதான், உலகத்தில் எது நடந்தாலும் பார்க்கத் தூண்டியது. ஏனென்றால், நம்ம மக்கள் அடிபட்டு வலிக்கும் போது நாம கதறுகிறோம். அதேபோன்ற கதறுதல்தானே அடுத்தவர்களிடம் இருக்கும் என்கின்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. 

தமிழ்.வெப்துனியா: உங்களுடைய அரசியல் பார்வை கூட, விடுதலைப் புலிகள், ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒட்டியதாக ஏற்பட்ட நிகழ்வுகளின் காரணமாக அரசியல் ஏற்பட்டதா? அல்லது பள்ளி, கல்லூரி வாழ்க்கையிலேயே ஏற்பட்டதா? 

புகழேந்தி: பள்ளி இறுதி முடிக்கும்போதே எனக்கு தமிழ் உணர்வு இருந்தது. எங்கள் குடும்பம் திராவிடர் இயக்க பின்னணியில் இருந்தது. எங்களுக்கெல்லாம் புகழேந்தி, மதிவாணன், பூங்கோதை என்ற பெயர்களை சூட்டியதெல்லாம் திராவிடர் இயக்கத்தினுடைய தாக்கம். ஒரத்தநாடு தொகுதி என்பது திராவிடர் இயக்கத்தின் மிக முக்கியமான கோட்டை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருந்தது. அதன் அடிப்படையிலே நாங்கள் பாரதிதாசன் பாடல்கள், பாரதியார் போன்று தமிழ் கவிதையெல்லாம் அந்த காலத்தில் எங்களுடைய தந்தை எங்களுக்கு ஊட்டினார், சொல்லிக் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் பாரதிதாசன் பாடல்களையெல்லாம் நாங்கள் ஒப்பிப்பது உண்டு. அது ஒரு உணர்வை, தமிழ் உணர்வைக் கொடுத்தது. ஈழப் பிரச்சனை, ஈழப் போராட்டம் தமிழன் என்கின்ற உணர்வைக் கொடுத்தது. 

தமிழ்.வெப்துனியா: கொழும்புவில் இருந்து ஈழத்திற்குச் செல்லும் போது அந்த உணர்வு எப்படி இருந்தது? சி்ங்கள மக்களையும் நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா? 

புகழேந்தி: நான் முதன் முதலில் கொழும்புவில் போய்தான் இறங்கினேன். கொழும்புவில் போய் இறங்கிய பிறகு, நான் வந்திருக்கிற செய்தி அறிந்து பத்திரிக்கையாளர்களே வந்துவிட்டார்கள். யாருக்கும் தெரியாமல்தான் போகவேண்டும் என்று நினைத்தோம். ஆனால் செய்தி எப்படியோ பரவி பத்திரிக்கையாளர்கள் வந்தார்கள். வந்திருந்தவர்கள் தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள்தான். அவர்கள் உடனே நிறைய செய்தியைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களிடம் நான் சொன்னேன், தயவு செய்து நான் திரும்பிப் போகும்வரை நேர்காணல்களை வெளியிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டேன். ஏனென்றால், என்னுடைய நோக்கம் வேறு. அப்படியிருந்தும் அவர்கள் பத்திரிக்கைகளில் போட்டுவிட்டார்கள். 

அவர்கள் பல்வேறு செய்திகளைச் சொன்னார்கள். என்னதான் சமாதான காலமாக இருந்தாலும் அந்தவொரு பதற்றம் தொற்றிக் கொண்டிருந்தது. அப்பொழுதே அந்த சமாதானத்தை உடைக்கின்ற பல்வேறு நிகழ்வுகளையெல்லாம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். எந்தவொரு புரிதல்களும் இல்லாத புரிந்துணர்வு ஒப்பந்தம். புரிதலே இல்லாத ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டு வைத்துக்கொண்டு, கொழும்புவிலும் பதற்றம், வெவ்வேறு இடங்களிலும் பதற்றம் என்று நிலவிய சூழல். அந்தச் சூழலில் நாங்கள் ஒவ்வொரு இடமாக சென்று, மகிழுந்துவில்தான் நாங்கள் பயணம் செய்தோம். 

போகின்ற ஒவ்வொரு இடங்களிலும் பார்க்கின்ற பொழுது சிங்கள மக்கள் பகுதிகளையெல்லாம் கடந்து சென்றோம். மிகவும் ஒரு அழகான நாடு. நல்ல பசுமையாக இருக்கின்ற ஒரு சூழல். நிறைய நதிகள் ஓடுகின்ற பகுதியாக சிங்களப் பகுதி இருக்கின்றது. உண்மையிலேயே பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. சில இடங்களில், புத்தளம் போன்ற பகுதிகளில் பயணம் செய்கின்ற போது, பல்வேறு பகுதிகள், தமிழ்ப் பகுதிகள் எல்லாம் சிங்கள மயமாக்கப்பட்டதை என்னுடைய நண்பர் சொல்லிக் கொண்டே வந்தார். பிறகு வவுனியா சென்றடைந்தோம். புத்தளமே தமிழ்ப் பகுதிதான். ஆனால் அது கலப்பு அதிகம் உள்ள பகுதி. அதைக் கடந்து வவுனியா செல்லுகின்ற பொழுது முழுக்க அது தமிழ்ப் பகுதி. 

ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிதான் வவுனியா. அந்தப் பகுதியை கடக்கும் பொழுதே, ராணுவ நடமாட்டம், காவல்துறை நடமாட்டம் என்று அதிகம் தெரிந்தது. வவுனியாவைத் தாண்டி ஓமந்தை. இதுதான் எல்லைப் பகுதி. தமிழீழப் பகுதியையும், ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியையும், வவுனியாவும் தமிழீழம்தான். ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி என்று சொல்வதற்கு கூட தமிழ் மக்கள் தயாராக இல்லை. ராணுவத்தினுடைய ஆக்கிரமிப்புப் பகுதி என்று சொல்லுவார்கள். அந்தப் பகுதிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழீழப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி. அதுதான் செக்போஸ்ட் என்று சொல்லக்கூடிய அந்தப் பகுதி.

தமிழ்.வெப்துனியா: 
போகும் வழியில் ராணுவத்தினர் உங்கள் ஓவியத்தைப் பார்த்தார்களா? 

புகழேந்தி: எல்லாவற்றையும் பார்த்தார்கள். நான் வரைந்த ஓவியம் என்று சொன்னேன். ஆனால், பார்க்கணும் என்று சொன்னார்கள். ஒவ்வொரு ஓவியமாக எடுத்து பிரித்தார்கள். ஓவியங்களை சுற்றிதான் வைத்திருந்தேன். அங்கே போய்தான் காட்சிப்படுத்தணும்கிற நிலையில எல்லாவற்றையும் சுருட்டி வைத்திருந்தேன். அதை ராணுவத்தினர் பரிசோதிக்க வந்தார்கள். என்ன என்று கேட்டார்கள், பெயிண்ட்டிங்ஸ்Dont Open அப்படின்னு சொன்னேன். No we should check everything அப்படின்னாங்க. You can proceed என்று சொன்னேன். அதை எடுத்து பிரித்து பார்க்க ஆரம்பித்த உடனேயே ஆர்வத்தில் எல்லாவற்றையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு என்ன இருக்கிறது என்பது புரிந்துவிட்டது. யார் செய்தது என்று கேட்டார்கள். நான்தான் செய்தேன் என்று சொன்னேன். எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள். சொன்னேன். ஒவ்வொரு ஓவியமாக பார்க்க ஆரம்பித்து பிறகு அதைப் பார்க்க மேலும் ராணுவத்தினர் வர ஆரம்பித்துவிட்டனர்.இவர்கள் ஆர்வத்தில் பார்க்க வர ஆரம்பித்ததும் எனக்கு கொஞ்சம் பதட்டம் வந்துவிட்டது. ஏனென்றால், அதில் அண்ணன் படமெல்லாம் இருக்கிறது. அது தேவையில்லாத சிக்கலை உருவாக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். அப்படி ஒவ்வொரு ஓவியமாகப் பிரித்துப் பார்க்கும் போது சொன்னேன், அழுக்காக்கி விடாதீர்கள். இதற்குப் பிறகும் அதைப் பார்க்காதீர்கள் என்று சொன்னேன். பிறகு அதிலிருந்த ஒருவர், பாவம் விட்டுவிடு என்று சொன்னார். 

உண்மையிலேயே அவர்கள் ஆர்வத்தில்தான் பார்க்கிறார்கள். அ‌தி‌ல் ஏதோ இருக்கிறது என்று அவர்கள் பார்க்கவில்லை. ஆனால், நமக்கு என்னன்னா, கீழே அண்ணன் படமெல்லாம் இருக்கிறது. தேவையில்லாமல் சிக்கலைக் கொடுக்குமே என்பது. பிறகு அவர்களே சுருட்ட ஆரம்பித்தார்கள். அப்புறம் நானே சுருட்டிக் கொள்கிறேன் என்று வாங்கி உள்ளே வைத்துவிட்டேன். பிறகு எங்கே போகிறீர்கள் என்று கேட்டார்கள். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டோம். 

தமிழ்.வெப்துனியா: உங்களுடைய பேச்சில், முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கூட போனேன் என்று சொன்னீர்கள். நந்திக் கடல் பகுதி தாண்டி அந்த இடத்திற்கு சென்றிருப்பீர்கள். அங்கே எப்படி இருந்தது அந்த நேரத்தில்? 

புகழேந்தி: உண்மையிலேயே முள்ளிவாய்க்கால், முள்ளியவலை அந்தப் பகுதியெல்லாம் நான் கண்காட்சி நடத்திய இடம்தான். மிகவும் அடர்ந்த காட்டுப் பகுதி போன்ற ஒரு பசுமையான சூழல், தென்னை மரங்கள் அழகாக இருந்தது. சண்டை இல்லாத காரணத்தினால், அதுவும் முக்கியமாக என்னவென்றால் மீள்கட்டமைப்பு செய்து கொண்டிருந்தார்கள். நிறைய மரங்கள் நட்டு, ஏனென்றால் நிறைய காடுகளை அழித்துவிட்டார்கள். குண்டுகளை போட்டு மரங்களை அழித்து, கொஞ்சம் கூட ஈவிரக்கம் இல்லாமல், சுற்றுச்சூழலைப் பற்றி கவலையில்லாமல் ஒட்டுமொத்தமாக அழித்துவிட்ட நிலையில், புலிகள் மீள்கட்டமைப்பில் ஈடுபட்டு, வன வளத்துறை ஒன்று உருவாக்கி அதிகமான மரங்களை நட்டு வனத்தை பாதுகாக்கின்ற ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தி நிறைய மரங்களை நட்டிருந்தார்கள். ஒரு பசுமையான சூழலை உருவாக்கியிருந்தார்கள். அந்தச் சூழலில்தான் நான் அந்த முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்றேன். அற்புதமான ஒரு இடம். நம்முடைய மக்கள் எவ்வளவு செழிப்போடு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்கு மிகவும் உதாரணமாக இருக்கின்ற, புரிந்துகொள்வதற்கு ஒன்றாக இருக்கின்ற நிலையில் அங்கே நான் சென்றேன். 

அவர்களுடைய வாழ்க்கையைப் பொறுத்தவரை, நம்முடைய வாழ்க்கை, இங்கே சராசரியான வாழ்க்கை என்பது அங்கே மிகவும் பின்தங்கிய வாழ்க்கை. பொருளாதார ரீதியாக, செழிப்போடு வாழ்ந்த மக்கள்தான் தமிழீழ மக்கள். அவர்கள் சுயமாக தங்களுடைய மண்ணில் உழைத்து, சம்பாதித்து செலவு செய்து வாழ வேண்டும் என்கின்ற உணர்வோடு இருக்கின்றவர்கள். அதைச் செய்தவர்கள். அப்படி அந்த மக்கள் நிறைய தொழில்கள் செய்து, விவசாயம் செய்து, பல்வேறு தோட்டங்களை உருவாக்கி, அவர்களுக்கென்று தனிப்பட்ட பொருளாதாரத்தை, மறுசீரமைப்பை கட்டமைத்துக் கொண்டிருந்த காலம் அது. அந்தச் சூழலில்தான் அந்த இடத்திற்குச் சென்றேன். பரந்த அளவில் ஒட்டுமொத்தமாக அழகான ஒரு நாட்டை அங்கே நீங்கள் பார்க்கலாம். அது முள்ளியவலை என்று அல்ல, அனைத்து இடங்களிலும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள அத்தனை இடங்களிலும் எந்த வேறுபாடும் இல்லாமல் கட்டமைத்திருந்தார்கள்.

அதற்கு ஒரு சின்ன உதாரணத்தை நான் சொல்ல வேண்டும். என்னுடைய கண்காட்சியை - என்னுடைய நிகழ்ச்சிநிரலை முதலில் திட்டமிட்டார்கள் - பல்வேறு இடங்களிலே நடத்துவது என்று திட்டமிட்டு பல்வேறு ஓவிய பயிலரங்குகளை நடத்தி, அந்த நிகழ்ச்சி நிரலை ஒரு மாதத்திற்கு முன்பே வெளியிட்டிருந்தார்கள். அதன்படி நிகழ்ச்சி நிரல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள், தமிழ்ச்செல்வனும், அவருடைய அரசியல் துணைப் பொறுப்பாளராக இருந்த சுதா மாஸ்டர் என்று சொல்லக் கூடிய தங்கன் அவர்களும் வந்தார்கள். 

அண்ணே என்ன செய்வீர்களோ தெரியாது, இரண்டு நாள் மன்னார் பகுதிக்கு வரணும் என்றார். நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே நெருக்கடியாக இருக்கிறதே, உங்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லையே, நான் எப்படி இரண்டு நாள் ஒதுக்குவது என்று சொன்னேன். என்ன செய்வீர்கள் என்று தெரியாதுண்ணே, மன்னாரில் இருந்த மக்கள் தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டார்கள். எங்களை நீங்கள் ராணுவத்துடனேயே தள்ளிவிட உத்தேசித்திருக்கிறீர்களா? யார் வந்தாலும் வன்னியோடு வைத்து அவர்களை நீங்கள் அனுப்பி விடுகிறீர்கள். எங்கள் மன்னார் என்ன செய்தது? ஏன் எங்கள் மன்னாரை நீங்கள் கண்டுகொள்ளவில்லை. இல்லை ராணுவத்தோடு எங்களை நீங்கள் விட்டுவிடுகிறீர்களா? என்று கேட்டு கடிதத்தை எழுதிவிட்டார்கள். 

தலைவர் கூப்பிட்டு எங்களிடம் சொல்லிவிட்டார். புகழிடம் எப்படியாவது பேசி இரண்டு நாள் ஒதுக்கிவிடுங்கள் என்று சொல்லிவிட்டார் என்று கேட்டபொழுது, உண்மையிலேயே அந்த மக்களுடைய எதிர்பார்ப்பு நியாயமானது என்று பட்டது. ஒன்றுமே சொல்லவில்லை, கவலையை விடுங்கள், யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் குறைத்துவிடுவோம், கொழும்புவில் ஒரு நாள் குறைத்துவிடுகிறேன். மன்னாரில் இரண்டு நாட்கள் கண்காட்சியை வைத்துவிடுங்கள் என்று சொல்லி மன்னாருக்கு இரண்டு நாட்களுக்கு திட்டமிட்டோம். 

யாழ்ப்பாணத்தில் 5 நாட்கள் நடக்க வேண்டிய கண்காட்சியை ஒரு நாள் குறைத்து 4 நாட்களாக்கிவிட்டு, நான் ஊருக்குத் திரும்பும்போது கொழும்புவில் ஒரு நாள் இருப்பதாகத் திட்டம். அதையும் தவிர்த்துவிட்டு இரண்டு நாட்களை ஒதுக்கி மன்னாரில் கண்காட்சி வைத்தோம். ஆக, அந்த மக்களுடைய உணர்வை எந்த அளவிற்கு மதிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.

நான் மன்னாருக்குச் சென்ற பிறகுதான், மன்னார் மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியாக இருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன். அந்த மக்களுடைய வாழ்க்கை, அந்தப் பகுதி, மீன் பிடி தொழில், மடு தேவாலயம் இருக்கின்ற பகுதியை எந்த அளவிற்கு சிங்கள ராணுவம் சீரழித்திருக்கிறது என்பதையும் பார்த்தேன். எந்தவிதமான மின்சார வசதியும் இல்லாமல் அந்தப் பகுதி இருக்கிறது. படிக்கின்ற குழந்தைகள் மிகவும் பின்தங்கிய பகுதியில் இருந்து படிக்கிறார்கள். உண்மையிலேயே ஈழத்திற்கு நான் சென்றிருந்தபோது, மன்னாருக்குச் சென்றிருந்தபோதுதான் முழுமை பெற்றது கண்காட்சி. அந்த மக்களோடும், குழந்தைகளோடு நான் இருந்ததும், அவர்களோடு நான் நேரத்தை பகிர்ந்துகொண்டதும் எனக்கு மிகவும் மறக்க முடியாத ஒரு அனுபவம். 

உண்மையிலேயே அங்கு செல்லாமல் வந்திருந்தால் தமிழீழ பயணம் முழுமை பெற்றிருக்காது என்றே நான் எழுதியிருப்பேன். ஏன் இதை சொல்கிறேன் என்றால், தமிழீழத்தின் எந்தவொரு பகுதியையும் புலிகள் புறக்கணிக்கத் தயாராக இல்லை. எல்லோரையும், எல்லா பகுதிகளையும் சமமாக மதித்தார்கள். அந்த அளவிற்கு முக்கியத்தும் கொடுத்தார்கள். அதுவும் குறிப்பாக அண்ணன் பிரபாகரன் அவர்கள் எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைத்தார். எல்லா பகுதிகளையும் ஒரே மாதிரியாக கட்டமைக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தார். அதற்காக வேலைத் திட்டங்களையும் செய்தார். அப்படி ஒட்டுமொத்த தமிழீழத்தையுமே ஒரு அழகான நாடாக, ஒரு மாதிரி நாடாக உருவாக்க வேண்டும் என்பதிலேயே அவர் குறியாக இருந்தார். 

தமிழ்.வெப்துனியா: மிக்க நன்றி. தமிழீழத்திற்கு சென்று வந்தது போன்று ஒரு உணர்வு இருக்கிறது. நன்றி.